தெஹிவளை, நிசல செவன பொது மயானத்தில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் திட்டமிடப்பட்ட குற்றவாளி ஒருவராலே இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தெஹிவளை - களுபோவில பிரதேசத்தில் அமைந்துள்ள நிசல செவன பொது மயானத்திற்கு அருகில் ‘சுமித் ரூபசேன’ என்பவரைக் இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தெஹிவளை கடற்றொழில் வீடமைப்புத் திட்டப் பகுதியைச் சேர்ந்த 56 வயதான பாதிக்கப்பட்ட நபர், 9 மி.மீ துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவரது இடது கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட நபரின் மகனுக்கு போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், மற்றுமொருவருடன் சேர்ந்து ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் காட்சிகள் சிசிரிவி கானொளியில் பதிவாகியிருந்தன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (26) தெல்கந்த பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அத்திடிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இந்த சந்தேகநபரிடமிருந்து 7.2 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 200,000 ரூபாயில் மீதமான 55,000 ரூபாய் பணம் மற்றும் சந்தேகநபர் பயன்படுத்திய 3 கைப்பேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space