அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பெருமளவிலான எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் மொரகஹஹேன, கோனபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, சந்தேகநபரின் வீட்டின் வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பௌசர் ஒன்று சோதனையிடப்பட்டது.
இதன்போது, பாணந்துறை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் அந்தப் பௌசருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6,600 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது.
அத்தோடு, குறித்த சந்தேகநபரின் வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 152 லீற்றர் டீசல் அடங்கிய ஒரு பீப்பாய்,120 லீற்றர் பெற்றோல் அடங்கிய ஒரு பீப்பாய் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் கோனபொல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பௌசரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6,600 லீற்றர் டீசல் மீட்பு: ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space