தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொது திறைசேரியை சூறையாடிக்கொண்டு, தமது அரசியல் தலைமையகமான பெலவத்தையின் கணக்குகளை நிரப்பி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதன்கிழமை (25) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நெருக்கடிகள் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் கவர்ச்சிகரமான வார்த்தைகளையும் பொய்களையும் பயன்படுத்தி, அந்தப் பழிபாவங்களை மக்கள் மீது சுமத்திவிட்டு தீர்வின்றி தவிக்க விடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது ஆற்றிய உரைகளுக்கும், இன்று அவர் வகிக்கும் ஜனாதிபதி பதவியின் செயற்பாடுகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
மக்கள் இன்று இந்த முரண்பாட்டால் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். அன்று 3 வீதமாக இருந்த ஜே.வி.பி-யின் வாக்கு வங்கியை 42 வீதமாக உயர்த்த அவர்கள் கையாண்ட ஒரே உத்தி, முந்தைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் மத்தியில் குரோதத்தையும் வெறுப்பையும் விதைப்பதுதான். தற்போதைய நெருக்கடிகளுக்கு யுத்தம் அல்லது இயற்கைச் சீற்றங்களை அரசாங்கம் காரணமாகக் காட்ட முயன்றாலும், நிர்வாகத் திறமையின்மை, அகங்காரம், பொய் மற்றும் முறையற்ற மேலாண்மை ஆகியவையே தற்போதைய மக்களின் துயரங்களுக்குக் காரணம் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
அரசாங்கம் பொருளாதார இலக்குகளை எட்டிவிட்டதாகவும், திறைசேரி நிரம்பி வழிகிறது என்றும், கடந்த ஆண்டே அதிக வரி வசூலிக்கப்பட்ட ஆண்டு என்றும் பெருமை பேசுகிறது.
அவ்வாறாயின், தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளின்படி உணவு, மருந்து, கல்வி உபகரணங்கள் மற்றும் எரிபொருட்களுக்கான வரிகளைக் குறைத்து மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாது என அவர் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் மேடைப் பேச்சுகளுக்கும் நடைமுறைக்கும் இடையில் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. 76 வருடங்களாக நாட்டைப் பிரபுத்துவ வர்க்கமே சீரழித்தது எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று ஏழை எளிய மக்களை சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாக்குவது ஏன் என்றும் அவர் வினவினார்.
மின்சார நெருக்கடி குறித்துப் பேசிய அவர், இது யுத்தத்தால் ஏற்பட்டதல்ல, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்களே இதற்குக் காரணம் என்றும், அதன் சுமையை மக்கள் இன்னும் எரிபொருள் விலையின் ஊடாகச் சுமந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் சம்பூர் மின் உற்பத்தி நிலையம், திருகோணமலை எண்ணெய் டாங்கிகள் புனரமைப்பு மற்றும் எல்.என்.ஜி மின் நிலையத் திட்டங்கள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்தி, நாட்டின் எரிசக்தித் துறையைச் சீரழித்த பெருமை ஜே.வி.பி-யையே சாரும் எனக் குற்றம் சாட்டினார்.
அமைச்சர்களான ஹந்துன்னெத்தி மற்றும் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் அண்மைய கருத்துக்களைச் சாடிய அவர், மக்களுக்கு துணி துவைப்பதற்குக் கூட வழியில்லாத நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும், வெறும் மேடைப் பேச்சுகளால் மாத்திரம் நாட்டை ஆள முடியாது என்பதை அரசாங்கம் இப்போது உணர்ந்துள்ளதாகவும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
பொது திறைசேரியை சூறையாடிக்கொண்டு "பெலவத்தையின்" கணக்குகளை அரசாங்கம் நிரப்பி வருகிறது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space