பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் எதிர்வரும் திங்கட்கிழமை (22) தனது பதவியில் இருந்து விலகக்கூடும் எனவும், அவர் விலகுவதற்கான கால அட்டவணையை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் 'தி அப்சர்வர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அவர் இன்னும் தனது அரசாங்கப் பணிகளில் முழு கவனத்துடன் இருப்பதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஸ்டார்மரின் அரசியல் எதிரியான ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமருக்கான அரசியல் அழுத்தம் கணிசமாக அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியை ஒரு மாபெரும் வெற்றிக்கு வழிநடத்திய கீர் ஸ்டார்மர், அதன் பின்னர் ஏற்பட்ட தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைச் சந்தித்துள்ளார்.
கிரேட்டர் மான்செஸ்டர் மேயராக இருந்த 56 வயதான ஆண்டி பர்ன்ஹாம், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார். இது பிரதமரின் தலைமைத்துவத்திற்கு நேரடி சவாலை ஏற்படுத்தியுள்ளது.
தனது பதவி இனி நீடிக்காது என்ற தீர்மானத்துக்கு வந்துள்ள ஸ்டார்மர், தனது உத்தியோகபூர்வ இல்லமான செக்கர்ஸ் இல்லத்தில் தனது மனைவியுடன் இறுதி முடிவு குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தொழிற்கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் ஆண்டி பர்ன்ஹாமே ஸ்டார்மருக்குப் பிறகு பிரதமராக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர். பர்ன்ஹாம் பிரதமராகப் பொறுப்பேற்றால், தற்போதைய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸை பதவியிலிருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளதாக 'தி டைம்ஸ்' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங்கும் இந்தத் தலைமைத்துவப் போட்டிக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை கீர் ஸ்டார்மர் பதவி விலகினால், கடந்த பத்தாண்டுகளில் பிரித்தானியா சந்திக்கும் 7 ஆவது பிரதமர் இவராவார்.
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் பதவி விலகத் தயாராக இருப்பதாக தகவல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space