பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான 'கரந்தெனிய சுத்தா'வின் எதிரித்தரப்பு முக்கியஸ்தர் ஒருவரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களிடமிருந்து 109 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சோபன ஹந்தி ஜயலத் டி சில்வா (கரந்தெனிய சுத்தா) என்பவரின் சகோதரரான 'ராஜு' எனப்படும் சனத் டி சில்வாவுக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்த போதே, நான்கு சந்தேகநபர்களும் எல்பிட்டிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அவர்கள் 'கரந்தெனிய சுத்தா'வின் எதிரித் தரப்பு குழுவின் முக்கிய உறுப்பினரை கொலை செய்ய நீண்டகாலமாக திட்டமிட்டு வந்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன், இவர்கள் ஏற்கனவே பல மனிதப்படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மீட்டியாகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டன.
இதன்போது ரி - 56 ரக துப்பாக்கி ரவைகள் 96 மற்றும் 9 எம்.எம் (9 மி.மீ.) ரக ரவைகள் 13 என மொத்தம் 109 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நிலத்தில் தோண்டி எடுக்கப்பட்ட தோட்டாக்கள்! - பாதாள உலகக்கும்பலின் பாரிய கொலைச்சதி அம்பலம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space