மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் குறைப்பதற்கும், நிதி வரம்புகளுக்குள் நின்றுகொண்டு அரச செலவீனங்களை முகாமைத்துவம் செய்வதற்குமான விசேட சுற்றறிக்கையை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவினால் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனத் தலைவர்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையில், தற்போது எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் புதன்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் கொடுப்பனவானது, மறு அறிவித்தல் வரை கடந்த மார்ச் மாதம் 01ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
எரிபொருள் கொடுப்பனவுக்குப் பதிலாக, எரிபொருள் அளவு மற்றும் விலையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகளையும் கடந்த மார்ச் 01ஆம் திகதி விலையின் அடிப்படையிலேயே கணக்கிட வேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அரச நிதி நிலைத்தன்மையை பேணுவதற்காகவும், அனுமதிக்கப்பட்ட செலவு வரம்புகளுக்குள் அரச இயந்திரத்தை இயங்குவதை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space