தேர்தல் காலங்களில் வங்கியில் எடுக்கும் பணத்துக்கு அதன் மேலாளர் சான்றிதழ் வழங்க வங்கிகளுக்கு வழிகாட்டுதல் வெளியிட ரிசர்வ் வங்கி கவர்னருக்கு, தமிழக வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் காலங்களில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம்,கண்காணிப்புக் குழுக்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
தினசரி வணிக நடவடிக்கைகளுக்காக வங்கிகளிலிருந்து பணம் எடுத்து பயன்படுத்தும் உண்மையான வணிகர்கள் பல இடங்களில் சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.
பொருட்களை வாங்குதல், தொழிலாளர்களுக்கு கூலி வழங்குதல், சப்ளையர்களுக்கு பணம் செலுத்துதல் போன்ற வணிக தேவைகளுக்காக, வங்கிகளிலிருந்து பணம் எடுத்துச் செல்லும் போது, தேர்தல் கால சோதனைகளில் அந்த பணத்தின் மூலத்தை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, தேர்தல் காலங்களில் வணிகர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும்போது, அந்த பணம் சம்பந்தப்பட்ட கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாகவும், அது வணிக தேவைகளுக்கானதாகவும் உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மூலம் எளிய சான்றிதழ் வழங்க அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
எனவே, எங்களின் இக்கோரிக்கையை கருணையுடன் பரிசீலித்து தேவையான வழிகாட்டுதல்களை அனைத்து வங்கிகளுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலங்களில் வங்கியில் எடுக்கும் பணத்துக்கு வங்கி மேலாளர் சான்றிதழ் வழங்க வேண்டும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space