சலே, கோட்டாபய உள்ளிட்ட எவராக இருந்தாலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்ல தயாராகவேண்டும்
Ad Space
Ad Space
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எவராக இருந்தாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்ல தயாராக வேண்டும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற தேசிய ஏற்றுமதி திட்டம் 2026 – 2030 உத்தியோகபூர்வமாக அறிமுக நிகழ்வினை தொடர்ந்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், அங்கு அவர் தெரிவித்ததாவது,
சுரேஷ் சலே கைது மற்றும் அவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் முற்றிலும் சட்டபூர்வமானவையாகும். இந்த நாட்டில் சட்டம் என்பது சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அல்லது தற்போதைய ஜனாதிபதி என அனைவருக்கும் பொதுவானது ஆகும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தன்னை கைது செய்ய வேண்டாம் என் விடுத்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளில் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சட்டத்துக்கு முன் எந்த நிபந்தனைகளும் கிடையாது. சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தங்களின் நிரபராதித் தன்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அவர்கள் அனைவரும் சிறைக்கு செல்லத் தயாராக இருக்க வேண்டும்.
மேலும் சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அவருக்கு ஆதரவாக பேசுபவர்கள் உண்மையில் சலே மீதான அக்கறையில் பேசவில்லை. தங்களுக்கு எதிராக வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தங்களை பாதுகாத்துத் கொள்ளவும் சுரேஷ் சலேவை ஒரு பகடையாக பயன்படுத்தவே முயற்சிக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது வெறும் மதவாதம் அல்லது பயங்கரவாதத்தைக் கடந்து அரசியல் மற்றும் அதிகாரத் தேவைகளுக்காக அரங்கேற்றப்பட்ட ஒன்று என தற்போது சமூகத்திலும் சட்டத் துறையிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்ட ரீதியான ஏற்பாடுகள் தீவிரமான முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Ad Space
Ad Space