தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது, வரம்பற்ற வரி விதிப்புகள் மற்றும் எரிபொருள் மாபியாக்கள் மூலம் தற்போதைய அரசாங்கம் மக்களைக் கொடூரமாகச் சுரண்டி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆனந்த பாலித கடுமையான குற்றஞ்சுமத்தினார்.
வியாழக்கிழமை (16) கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் வெறும் 2 வீதத்தை மாத்திரமே அரசாங்கம் கொள்வனவு செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு இல்லாத நிலையிலும் கியூ.ஆர். கோட்டா முறையினால் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
தேர்தல் காலத்தில் எளிய மக்களுடன் ஒன்றோடு ஒன்றாக இருந்த லால் காந்த, வசந்த சமரசிங்க போன்ற தலைவர்கள், இன்று குறுகிய காலத்துக்குள் மாளிகை போன்ற சொகுசு வீடுகளையும் சொகுசு வாகனங்களையும் வாங்கியுள்ளமை எவ்வாறு என்பது குறித்து ஜனாதிபதி உடனடியாக விசாரணை நடத்தவேண்டும்.
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படாத 23 சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். பொதுமக்களின் குரலாக அன்று ஒலித்தவர்கள் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்ற பின்னர் மாடுகளின் மொழியிலேயே பேசி வருகின்றனர். இந்த மக்கள்விரோத அரசாங்கத்தின் போக்கை முறியடிக்க ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் விவசாயிகளும் வீதிக்கு இறங்கிப் போராடவேண்டும் என்றார்.
அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space