இலங்கைக்கான 12.5 சதவீத தீர்வை உள்ளடங்கலாக அமெரிக்காவினால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர் தொடர்பான தீர்வைகள் குறித்து இலங்கை வர்த்தக சம்மேளனம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட தீர்வை நிர்ணயம் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, அமெரிக்காவுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவரும் அதேவேளை, சாதகமானதொரு வர்த்தக உடன்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பின்னணியிலேயே இந்தத் தீர்வை விதிப்பு நிகழ்ந்திருப்பதாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏனைய நாடுகள் 10 சதவீதம் எனும் குறைவான தீர்வை வீதத்தை எதிர்கொள்ளும் நிலையில், இலங்கைக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த உயர்வான தீர்வை நாட்டின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையைப் பாதிக்கக்கூடும் என்று அவ்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
'இலங்கையின் ஏற்றுமதித்துறைக்கு இது ஒரு சவாலான காலகட்டமாகும். இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதிகள் முறையே 7 சதவீதமாகவும், 6 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளன. இருப்பினும் தொழிலாளர், சுற்றுச்சூழல் மற்றும் ஆளுமை சார்ந்த தரங்களைப் பேணுவதிலும், நெறிமுறை சார்ந்த வணிகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதிலும் இலங்கை பொறுப்புவாய்ந்த மூலப்பொருள் விநியோகத் தளமாகத் திகழ்கிறது' எனவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இத்தீர்வை விதிப்பின் அடிப்படையைப் புரிந்துகொள்வதற்கும், இலங்கையின் நியாயப்பாடுகளை எடுத்துரைப்பதற்கும் அமெரிக்காவுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு வலியறுத்தியுள்ள வர்த்தக சம்மேளனம், 'முன்மொழியப்பட்ட தீர்வையில் குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும், இறுதியில் அதனை முழுமையாக நீக்குவதற்குமான சகல முயற்சிகளையும் இலங்கை முன்னெடுக்கவேண்டும்' எனக் கோரியுள்ளது.
அமெரிக்கத் தீர்வை விதிப்பை அகற்றுவதற்கான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space