அசாமில் ஏற்பட்ட வன்முறை பல மாநிலங்களிலும் பரவி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் பீதியால் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவ, மாணவிகளும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
இதனால் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசாமில் போடோ பழங்குடியினருக்கும், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாதம் பயங்கர மோதல் ஏற்பட்டது.
ஒரு வாரம் நீடித்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். படையினர் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து நிலைமை சீராக தொடங்கியது. எனினும் கலவரம் முழுமையாக ஓயவில்லை. கோக்ரஜார் மாவட்டத்தில் மர்ம நபர்கள் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதையடுத்து கலவரத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
அசாம் கலவரத்தை கண்டித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஊர்வலம் நடந்தது. அதிலும் வன்முறை ஏற்பட்டு 2 பேர் பலியாயினர். இதற்கிடையே, வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடக்கும் என்று பல மாநிலங்களில் வதந்திகள், மிரட்டல் எஸ்எம்எஸ்கள் பரவின.
பெங்களூரில் வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடந்தது. இதனால் மும்பை, புனே, பெங்களூர், ஐதராபாத், சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட நகரங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்களும் கல்லூரி மாணவ, மாணவிகளும் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.