சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் அரசியல் அனாதைகளாக வாழும் நமது மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களின் முக்கியத்துவம் தொடர்பில் இதொகா பொதுச்செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நன்கு தெரியும். எனவே ஒரு பொதுப்பட்டியலை முன்னிறுத்தும் முயற்சிக்கு இதொகா ஒத்துழைப்பு வழங்கும் என நான் நம்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணசபை தேர்தலில் மலையக மக்களின் வாக்குகள் சிதறாவண்ணம் மலையக தமிழ் கட்சிகள் ஒரு பொதுப் பட்டியலை முன்னிறுத்தி போட்டியிடுவதற்காக செய்யப்படும் முயற்சி தொடர்பிலும், இந்த முயற்சிக்கு இதொகா ஒத்துழைப்பு வழங்குமா என்பது தொடர்பிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்த நல்ல முயற்சியை கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் பெ. முத்துலிங்கம் செய்து வருகின்றார். முதற்கட்டமாக எமது கட்சி உட்பட சில கட்சிகளை அழைத்து அவர் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். அரசியல் பேதங்களுக்கு அப்பால் சென்று பொதுப் பட்டியலில் போட்டியிடவேண்டும் என்ற கருத்தை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. அத்துடன் இந்த நல்ல முயற்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இணைந்துகொள்ள வேண்டும் என்பதுவும் அனைத்து கட்சிகளினதும் கருத்தாகும்.
இந்த முயற்சி இன்று சப்ரகமுவ மாகாணத்தில் வாழ்கின்ற தொழிலாளர்கள், மலையக புத்திஜீவிகள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், சமூக முன்னோடிகள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உண்மையில் சப்ரகமுவைக்கு அப்பால் மலையகம் முழுக்கவும் இந்த கருத்து எதிரொலிப்பதை கடந்த சில நாட்களாக எங்களை வந்து அடையும் கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன.
எங்கள் மத்தியில் அரசியல் முரண்பாடுகள் இருக்கின்றன. நாங்கள் ஆளும் அரசாங்கத்திலும், எதிர்க்கட்சி கூட்டிலும் என வெவ்வேறு அணிகளாக பிரிந்து இருக்கின்றோம். ஆனால் மலையகத்தில் நமது மக்களுக்கு துன்பம் வரும்போது, அது நமக்குத்தான் வலிக்கின்றது. மனோ கணேசனுக்கோ, ஆறுமுகன் தொண்டமானுக்கோ அல்லது திகாம்பரத்திற்கோ, மலையக மக்கள் முன்னணி தலைவர்களுக்கோதான் வலிக்கின்றது. தேர்தல்காலங்களில் நாம் வாக்குகள் வாங்கி கொடுக்கும் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு வலிப்பதில்லை.
குறிப்பாக, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை, மாத்தளை, காலி ஆகிய நமது தோட்டத்தொழிலார்கள் சிறுபான்மையாக வாழும் மாவட்டங்களில், நமது மக்கள் மிகவும் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். நாடாளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் நமது மக்கள் இந்த மாவட்டங்களில் அரசியல் அனாதைகளாக வாழ்கிறார்கள்.
எனவே குறைந்தப்பட்சமாக இந்த மாவட்டங்களிலாவது நாம் நமது அரசியல் பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. பொது பட்டியலில் அனைத்து கட்சியினரும் தமது வேட்பாளர்களை போட்டியிட வைக்கலாம். பொது சின்னத்திற்கு நமது மக்கள் வாக்களிப்பதன் மூலம் எமது வாக்குகள் சிதறடிக்கப்படுவது தவிர்க்கப்படும். அதேவேளையில் வாக்களிக்கும் மக்கள் தமக்கு விருப்பமான வேட்பாளருக்கு தமது விருப்பு வாக்குகளை அளிக்கலாம். வெற்றிபெறும் வேட்பாளர் தம்மை நியமித்த கட்சியின் கொள்கையின்படி மக்கள் பணி ஆற்றலாம்.
இதொகாவின் ஸ்தாபக பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் இந்த அடிப்படையிலேயே 1999 ஆண்டு மாகாணசபை தேர்தல்களின் போது, கூட்டு செயல்பாட்டை முன்னெடுத்தார் என்பதும் இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. அந்த பாதையை இதொகா இன்றும் பின்பற்றும் என்பது எனது நம்பிக்கை.