விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார் !

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார்.

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சமர்ப்பித்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் சனிக்கிழமை (22)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பாதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அதாவது தனியார் மயப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

நட்டமடையும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகள் மந்தகதியில் உள்ளன. ஆனால் இலாபமடையும் டெலிகொம் நிறுவனம், லங்கா வைத்தியசாலை, லிட்ரோ நிறுவனம் ஆகியவற்றை தனியார் மயப்படுத்த அரசாங்கம் துரிதகரமாக செயற்படுகிறது.

டெலிகொம் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமும், 49 சதவீத பங்குகள் தனியார் வசமும் காணப்படுகின்றன. அரசாங்கத்திடம் உள்ள 50 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார்.

டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர அறிக்கை சமர்ப்பித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை பொய் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டு உண்மையை மறைத்து விட்டது. பாராளுமன்ற தெரிவுக்குழுக்களின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என்றார்.