பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு  (05.07.2023) புதன்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை மற்றும் கடற்புலிகளின் ஏற்பாட்டில் பகல் 13.00 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைக்க, மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைத்தார்.

மாவீரர் பொதுப்படத்திற்கான மலர்மாலையை மாவீரர் கப்டன் துரியோதனன் அவர்களின் சகோதரன் அணிவித்தார்.

கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் திருவுருவப்படத்திற்கான சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைக்க சார்ள்ஸ் அன்ரனி பிரிவு முன்னாள் போராளி ஒருவர் மலர்வணக்கம் செலுத்தினார்.

கடற்கரும்புலி அங்கையற்கண்ணி அவர்களின் திருஉருவப்படத்திற்கான சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க, மாவீரர் கப்டன் வெண்மதி அவர்களின் சகோதரி மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. அமைதியாக அணிவகுத்து அனைவரும் கரும்புலி மறவர்களுக்கான மலர்வணக்கத்தைச் செய்தனர். தொடர்ந்து கரும்புலிகள் நினைவான எழுச்சி கானங்கள், எழுச்சி நடனங்கள், கவிதைகள் மற்றும் நினைவு உரைகள் இடம்பெற்றன.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் கரும்புலி வீர மறவர்களின் காவியம் பற்றி உரை நிகழ்த்தியதுடன், சமகால நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.

நிழ்வின் நிறைவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலைத் தொடர்ந்து. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.