டயகம நகரில் மதுபானசாலை திறக்கப்படவுள்ளதை எதிர்த்து சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா – டயகம நகரில் புதிதாக மதுபானசாலை திறக்கப்படவுள்ளமையை எதிர்த்தும், அவ்வாறு திறப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டயகம நகரைச் சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (09) டயகம நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டயகம நகரில் ஏற்கெனவே மூன்று மதுபானசாலைகள் உள்ள நிலையில், மற்றுமொரு புதிய மதுபானசாலைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த மதுபானசாலையை திறக்கக்கூடாது என கோஷமிட்டு சிறுவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்துக்காக திரண்ட சிறுவர்கள் சுவரொட்டிகளையும் பதாதைகளையும்  ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன், கடந்த 2 நாட்களுக்கு முன்னரும் டயகம நகர் மற்றும் அதனை அண்மித்த தோட்டத் தொழிலாளர்கள் இந்த மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.