பனகல் அரசர் வழிநடந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பனகல் அரசர் வழிநடந்து தமிழகத்தை முன்னேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பனகல் அரசரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும் பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! அதிகாரத்தை நாம் அடைவதன் மூலம் நமது மக்களுக்கு நம்மால் எத்தகைய நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை, மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை, பெண்களுக்கு வாக்குரிமை, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற எண்ணற்ற புரட்சிகரத் திட்டங்களால் காட்டியவர் அவர்!

பனகல் அரசர் பற்றிய துணைப்பாடக் கட்டுரைதான் பள்ளி மாணவராக இருந்த கருணாநிதிக்கு அரசியல் அரிச்சுவடியாக விளங்கியது. “தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்” எனத் தந்தை பெரியார் போற்றிய பனகல் அரசர் வழிநடப்போம்! தமிழகத்தை முன்னேற்றுவோம்!” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.