வைத்தியர்களின் வெளியேற்றத்தை தடுக்காவிட்டால் சுகாதாரத்துறை பாரிய சிக்கலை எதிர்கொள்ளும்!

வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாத்துறை பாரிய நெருக்கடியை எதிர்நொக்கும் என்பதுடன் விசேட வைத்திய நிபுணர்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் ஊடக பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் அசோக்க குணரத்ன தெரிவித்தார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்  நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டுசெல்வது, அவர்களுக்காக உத்தியோக பூர்வ வாசஸ்தலம் அல்லது வேறு காரணங்களுக்காக அல்ல. மாறாக நாட்டில் இருக்கும் அதிகரித்துள்ள வரி மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மை போன்ற விடயங்களுக்கே அதிகமானவர்கள் வெளியில் செல்கின்றனர். இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வது பாரிய பிரச்சினையை சுகாதாரத்துறையில் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

அத்துடன் இன்று வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இரண்டு பேர் இருந்த இடங்களில் ஒருவரே இருக்கின்றனர். 3பேர் இருந்த இடங்களில் 2பேரே இருக்கின்றனர்.இந்த நிலைமை தொடருமானால் சுகாதாரத்துறையை சுருக்கி விடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. இது தொடர்பாக 10 மாதங்களுக்கு முன்னரே நாங்கள் தெரிவித்து வருகிறோம். ஆனால் சுகாதார அமைச்சு அது தொடர்பில் கண்டுகொள்ளாமல் இருந்துவந்தது.

தற்போது சுகாதார அமைச்சு, விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறிச்செல்வதன் காரணத்தை மறைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். விசேட வைத்திய நிபுணர் ஒருவரை பயிற்றுவிக்க சுமார் 10, 12 மில்லியன் ரூபா செலவிடுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவிக்கும் இந்த தொகை குறித்த வைத்தியருக்கு வழங்கும் சம்பளத்துடனாக இருக்கலாம். ஏனெனில் விசேட வைத்தியர் ஒருவர் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் 3வருடங்கள் வைத்தியசாலையில் இரவு பகலாக சேவை செய்ய வேண்டும். அவ்வாறு சேவை செய்தே இந்த சம்பளத்தை அவர்கள் பெறுகின்றனர்.

எனவே வைத்தியசாலைகளில் இன்னும் பாரியளவிலான விசேட வைத்திய நிபுணர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது இல்லாவிட்டால் வைத்தியர்கள் பாரியளவில் நாட்டை விட்டு செல்வதால் ஏற்படும் வைத்தியர்களுக்கான பற்றாக்குறையை போக்குவதற்கு இருக்கும் ஒரே தீர்வு வெளிநாடுகளில் இருந்து வைத்தியர்களை நாட்டுக்கு அழைத்துவருவதாகும் என்றார்.