அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கிய இருந்த நிலையில் இரண்டு லொறிகளுக்கு இடையில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வேனின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

மேலும், வேனில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.