யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி?

பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை பெற, ரேஷன் கார்டு எந்தக் கடையில் உள்ளதோ, அந்த கடையில் விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, யார் யாருக்கெல்லாம் இந்த உரிமைத் தொகை கிடைக்கும், என்னென்ன தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அரசு தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தொகை யாருக்கு கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்காது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம்:

ரேஷன் கார்டு எந்தக் கடையில் உள்ளதோ, அந்தக் கடையில் விண்ணப்பிக்க வேண்டும்.
> பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது
> பெண் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களான குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.
> ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது.
> சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.
> ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.

3,500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப் படாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள்: மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்த முதலில் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதற்கான பணியில் “இல்லம் தேடி கல்வித் திட்ட” தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கென பிரத்யேக செயலி வழங்கப்படும். இந்தச் செயலில் பயனாளிகள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய, நியாய விலைக் கடையில் உள்ளது போன்று பயோ மெட்ரிக் கருவியும் வழங்கப்படும். இந்தக் கருவியின் மூலமாக, குடும்ப அட்டைதாரர் குறித்த உண்மை நிலை அறிந்து கொள்ளப்படும்.

61,893 பேர்… – ஒரு நியாய விலைக் கடையில் 500 குடும்ப அட்டைதாரர்கள் இருந்தால் அவர்களுக்கு பொறுப்பாக, “ஒரு இல்லம் தேடி கல்வித் திட்ட” தன்னார்வலர் இருப்பார். ஆயிரம் அட்டைகளாக இருந்தால், 2 பேரும், 1,500 அட்டைதாரர்களாக இருந்தால் மூன்று பேரும் பொறுப்பாக நியமிக்கப்படுவர். தமிழகத்தில் மொத்தமாக 34, 806 நியாய விலைக் கடைகள் உள்ளன. உரிமைத் தொகைக்கான விவரங்களைச் சேகரிக்கும் பணியில் 61,893 இல்லம் தேடி திட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.