‘13’ குறித்த அரசாங்கத்தின் இறுதியான திட்டம் என்ன ?

13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் யோசனையை கோரியுள்ள  அரசாங்கத்தின் திட்டம் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் தமது பரிந்துரைகளை முன்மொழிவுகளையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்புக்கு பதிலளிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்காட்சியினுடைய பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார,

13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக அரசாங்கம் அரசியல் கட்சிகளுடைய யோசனையை கோரியுள்ளது. அதற்கு முன்னதாக இந்த விடயத்தில் அரசாங்கம் எவ்விதமான இறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி அரசியல் கட்சிகளின் யோசனையை கோருவதற்கு முன்னதாக அவர் தலைமையிலான அரசாங்கம் எவ்விதமான இறுதி முடிவை எடுத்துள்ளது என்பதை முதலில் எமக்கு அளிக்க வேண்டும்.

அதனடிப்படையிலேயே நாம் எமது யோசனைகளை முன்வைக்க முடியும். 13ஆவது திருத்தச்சட்ட விடத்தில் மட்டும் அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் யோசனைகளை பெறுவதற்கு முன்னைவது வழமைக்கு மாறானதொரு விடயமாகும்.

ஆகவே, இந்த விடயத்தில் அரசாங்கம் தனது யோசனைகளை முன்வைக்கின்ற பட்சத்தில் அது தொடர்பில் நாம் எமது நிலைப்பாடுகளையும் முன்மொழிவுகளையும் வெளிப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்றார்.