‘13’ குறித்த பரிந்துரைகளைச் செய்ய தமிழரசுக் கட்சி தீர்மானம்

13ஆவது திருத்தம் சம்பந்தமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அத்துடன் விரைவில் சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தம் சட்டம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை கோரியுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் அக்கட்சியின் வெளிவிகாரங்களுக்கான செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக தமிழரசுக்கட்சியின் பரிந்துரைகளை வரைவு செய்து அனுப்புவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரவு தயாரிப்பு பணிகளை சம்பந்தனின் வழிகாட்டலில் சுமந்திரன் முன்னெடுக்க உள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டின் போது அதிகாரபகிர்வு, மாகாண சபை தேர்தல் சம்பந்தமான கலந்துரையாடல் சுமூகமற்ற நிலையில் நிறைவுக்கு வந்துள்ள சூழலில் அதுகுறித்து விரைவில் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த சந்திப்பில் சம்பந்தன் மட்டும் பங்குபற்றுவதா இல்லை சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவதா என்பது சம்பந்தமாக இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.